எனது இயக்கம் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், சென்னை திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. அதிமுக தொண்டர்கள் அழைத்ததால் அரசியலுக்கு வரவழைக்கப்பட்டேன்.
எனது இயக்கம் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். எனவே எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நாடளுமன்றத்தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுக்கு மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிக்கிறது. இந்தத் தேர்தலில் எனது இயக்கத்தை சேர்ந்த அனைத்து தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அதிமுகவின் வெற்றியை நோக்கி செயல்படுவார்கள். மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி, அதிமுகவின் எதிர்கால நலன் மற்றும் கழகத்தின் வெற்றியை கருத்தில் கொண்டு எனது பேரவையின் தொண்டர்கள் பாடுபடுவார்கள். ஜெயலலிதாவின் ஆசைப்படி அவருக்குப் பிறகும் இந்தக கழகம் நீடித்து மக்கள் நலனை பாதுகாத்து அவர்கள் பாதையில் பயனிப்போம் எனத் தெரிவித்து கொள்கிறேன்” எனக் கண் கலங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, “எங்களது இயக்கத்தை அதிமுகவுடன் இணைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான வேலைகள் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும். அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. காரணம் இந்தத் தேர்தல்தான். எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை. எனது அத்தை வளர்த்த கட்சி ஒரு அழிவுப்பாதையில் செல்ல நான் விரும்பவில்லை. அதனால்தான் இந்த மனமாற்றம். இந்த முடிவு.
அதிமுக தரப்பிலிருந்து அழைப்பு வந்தால் பரப்புரையில் ஈடுபடுவேன். மூன்று மாத காலமாக அதிமுகவுடன் இணையதான் முயற்சி செய்து வந்தோம். அதிமுக நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே அறிவிப்பு வெளியிட்டுள்ளேன். கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு எங்கள் பேரவையில் உறுப்பினர்கள் உள்ளார்கள். நிர்வாகிகள் மட்டுமே 17 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் உள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள அத்தனை கட்சிகளும் ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள்தான். ஆனால் தேர்தல் வரும்போது அதையெல்லாம் கடந்து போக வேண்டிய சூழ்நிலை” எனக் குறிப்பிட்டார்.