டிரெண்டிங்

'வாக்களிக்காமல் இருப்பது தேசிய குற்றம்' - சீமான்

JustinDurai

''நல்லவர்களுக்கு வாக்களித்தால் நமக்கு நன்மை; அயோக்கியர்களுக்கு வாக்களித்தால் அவர்களுக்கு மட்டுமே நன்மை'' எனத் தெரிவித்துள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலப்பாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ''மக்கள் வெறுப்புணர்வை வெளிகாட்டும் விதமாக நோட்டாவிற்கு வாக்களிக்கின்றனர். வாக்களிக்காமல் புறக்கணிப்பும் நடைபெறுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் அடிப்படைத்தேவை பூர்த்தி செய்யப்பட்டதா? மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அரசு, அரசு அல்ல தரிசு. முதன்மை சாலையிலேயே பயணம் செய்ய முடியவில்லை, உட்புறச் சாலைகளில் எவ்வாறு பயணம் செய்ய முடியும்?  

மறைமுக தேர்தலாக இருப்பது பேரம் பேசுவதாகவும், கிளி ஜோசியம் போலதான். சுயேட்சை வேட்பாளர்களை பேரம் பேசும் நிகழ்வு நடக்க உள்ளது. எவ்வளவு பணம் கொடுத்தாதவது, வேட்பாளராக சீட் பெறவேண்டும் என்றும், வாக்கிற்கு பணம் கொடுத்து வாக்கு பெற தயாராக உள்ளனர். மன்னன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி. ஒவ்வொரு முறையும் ஒதுக்கிய நிதி எங்கே? ஒவ்வொரு ஆண்டும் சாலை போடும் பணி நடைபெறுவது எந்த நாட்டில் இந்த வழக்கம் உள்ளது. பள்ளிக்கரனை ஏரியில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் இடமாக இருந்தது, ஆனால், குப்பையாகவும், பிளாஸ்டிக் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் தான் உள்ளது.

அதிமுக வாக்கிற்கு பணம் விநியோகம் செய்ய வந்த இருவரை திமுகவினர் காவல் துறையிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் அவர்களும் பணம் கொடுக்க வந்தவர்கள்தான்.  வாக்களிக்கும்போது நல்லவர்கள் யார் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும், நல்லவர்களுக்கு வாக்களித்தால் நன்மை நமக்கு, அயோக்கியர்களுக்கு வாக்களித்தால் அவர்களுக்கு மட்டுமே நன்மை. வாக்களிக்காமல் இருப்பது தேசிய குற்றம்.  ஊழல், லஞ்சம் ஆகியவை தேசிய மயமாக்கப்பட்டுள்ளது'' என சீமான் கூறினார்.