அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரருடைய உதவியாளர் வீட்டில் 13 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்தது. அதில் 50 லட்சம் ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமார் என்பவருக்குச் சொந்தமாக, இலுப்பூர் அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், விராலிமலையைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். ரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் வீட்டிற்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், நள்ளிரவு 2 மணி வரை சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.