டிரெண்டிங்

மதுரையில் ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவர் - அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்

Sinekadhara

மதுரை மேலூரில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்திய பாஜக முகவர் கிரிராஜனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

மதுரை மாவட்டம் மேலூரில் 8வது வாக்குச்சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வாக்குச்சாவடியின் பூத் ஏஜெண்ட்டாக செயல்பட்ட கிரிராஜன் என்பவர், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் முகம் தெரியவில்லை எனக்கூறி அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்றச்சொல்லி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திமுக, அதிமுக, பிற கட்சியினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அங்குவந்த போலீசார் கிரிராஜனை வாக்குச்சாவடியிலிருந்து வெளியேற்றினர். அவர் வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் உள்ளே நுழைய முயன்றதாக கிரிராஜன் மீது புகார் எழுந்தது.

இதனால் மதுரை மேலூர் நகராட்சியின் 8ஆவது வார்டிலுள்ள அல்அமீன் பள்ளிகூட வாக்குச்சாவடி அருகே சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார்.