சட்டப்பேரவையில், 'மாண்புமிகு அம்மா அரசு' என துரைமுருகன் பேசியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பேரவையில் கேவி குப்பம் அதிமுக எம்எல்ஏ லோகநாதன், தனது தொகுதியை புதிய வட்டமாக மாற்ற வேண்டும் என வருவாய்துறை அமைச்சரிடம் கேட்டார். அதற்கு அமைச்சர் உதயகுமார் ஏற்கனவே அம்மாவின் அரசு 72 வட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பதிலளித்தார்.
பின்னர் பேசிய துரைமுருகன், '73 வது வட்டத்தை அம்மாவின் அரசு ஏற்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி பேசினார். இதனையடுத்து, 'அம்மா அரசு' என கூறியதற்கு துரைமுருகனுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய துரைமுருகன், வட்டத்தை ஏற்படுத்தினால் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்கிறேன் என்று கூறியவுடன் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. துரைமுருகன், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ. காட்பாடியும், கே.வி.குப்பமும் அருகருகில் உள்ள தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ‘இன்று துரைமுருகன் கலர்புல்லாக உள்ளார். என்றும் 16 ஆக அவர் உள்ளார். இளமை ரகசியம் என்ன’ எனவும் ஓபிஎஸ் பேசினார். ஓபிஎஸ் பேச்சால் அவையில் நீண்ட சிரிப்பலை ஒலித்தது.