டிரெண்டிங்

வேறு சமூகப் பெண்ணுடன் காதல் : சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. கொலையா ?

webteam

விருதுநகரில் காணாமல் போன இளைஞரின் உடல், தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அக்கரைப்பட்டியைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளியான மகேந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த திங்களன்று அதிகாலை அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்குச்சென்றுள்ளார் மகேந்திரன்.

இதையடுத்து மகளை மீட்டுத்தரக்கோரி பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, மாலையில் பெண்ணை காவல்துறையினர் முன்னிலையில் பெற்றோரிடம் மகேந்திரனின் உறவினர்கள் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து உறவினர் வீட்டில் இருந்து மகேந்திரன் காணாமல் போனார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் சங்கரன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் ஆலையின் பின்புறம் உள்ள கிடங்கு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மகேந்திரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் உறவினர்கள்தான் மகேந்திரனை கடத்திச் சென்று கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.