டிரெண்டிங்

கூகுளை பார்த்து செய்த சட்டவிரோத கள்ளத் துப்பாக்கி... இருவர் கைது...!

kaleelrahman

புதுக்கோட்டையில் கூகுளை பார்த்து சட்டவிரோதமாக கள்ளத் துப்பாக்கி தயாரித்த இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
புதுக்கோட்டை அருகே உள்ள உடையநேரி காலனி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இங்கு சட்டவிரோதமாக கள்ள துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கணேஷ் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த வீட்டை சோதனையிட்டார்.

அப்போது வீட்டினுள் சட்டவிரோதமாக கள்ளத் துப்பாக்கி தயாரிக்கும் பணியில் இரு இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (19), மாரிமுத்து (21) என்பதும் இவர்கள் கூகுள் இணையதளத்தை பார்த்து கள்ளத் துப்பாக்கிகள் செய்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அங்கு கள்ளத்துப்பாக்கி செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது சட்டவிரோதமாக கள்ளத்துப்பாக்கி தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டையில் கூகுள் செயலியை பார்த்து இரண்டு இளைஞர்கள் கள்ளத்துப்பாக்கி தயாரித்து போலீசாரின் பிடியில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.