டிரெண்டிங்

"நீ போன இடத்துக்கே நானும் வர்றேன்... " மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவர்...

"நீ போன இடத்துக்கே நானும் வர்றேன்... " மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவர்...

kaleelrahman

சீர்காழி அருகே திருவெண்காட்டில் மனைவி இறந்த சோகத்தில் கணவன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பத்மா. வீட்டின் அருகேயே சொந்தமாக டீ கடை நடத்தி வருகிற இவர்களுக்கு 5 மகன்கள் 1 மகள் என ஆறு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகனுக்கு மட்டுமே திருமணமாகியுள்ள நிலையில் அனைவரும் கூட்டு குடும்பமாகவே வசித்து வந்தனர். அதிகாலை முதல் இரவுவரை தம்பதிகள் இருவரும் கடையில் டீ விற்பனை செய்து விட்டு ஒன்றாக வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் பத்மா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை குடும்பத்தினர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவம் செய்தும் உடல் நலம் சரியாகாமல் படுத்த படுக்கையாகி கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


பாசத்துடன் பார்த்துக்கொள்ள 6 பிள்ளைகள் இருந்தாலும் வீடு கடை என எப்போதும் தன்னுடன் இருந்த மனைவி இறந்த சோகத்தில் இருந்த குமார் நேற்று இரவு விஷமருந்திவிட்டு வீட்டிலேயே அனைவருடனும் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென வாந்தி எடுத்த போதுதான் குமார் விஷம் அருந்தியது தெரிந்தது.


உடனே அவரது மகன்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். மனைவி மீது கொண்ட பாசத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து திருவெண்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.