டிரெண்டிங்

“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட் 

rajakannan

இந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிரான திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாளை மறுநாள் திமுகவின் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என ப.சிதம்பரம் கே.எஸ்.அழகிரியிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டரில், “நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்ற கருத்து அபாயகரமானது. தமிழ் மக்கள் மட்டுமல்ல; மற்றவர்களும் இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மொழிகளின் வளர்ச்சியையும் ஆதரிக்கிறோம். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம். இந்தி பேசாத மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், “தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது.  இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. 

தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். 

இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐஎன்எஸ் மீடியா மோசடி வழக்கில் ப.சிதம்பரம் சிறையில் உள்ள நிலையில், அவரின் சார்பாக குடும்பத்தினர் ட்விட்டர் பதிவுகளை மேற்கொள்வார்கள் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.