டிரெண்டிங்

சேலம்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பியோட்டம்.. உதகையில் சிக்கினார்

kaleelrahman

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தப்பித்த கொலை வழக்கு கைதி, உதகை பர்லியார் சோதனை சாவடியில் பிடிபட்டார். 

சேலம் அருகே மல்லூரில் கடந்த 18 ஆம் தேதி அன்று லட்சுமி என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் லட்சுமி கொலைச் சம்பவம் தொடர்பாக கிடைத்த தடயங்களின் அடிப்படையில் நரேஷ் குமார் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். நரேஷ் குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நரேஷ்குமார் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். இவரை பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தேடிவந்த நிலையில் உதகைக்கு பைக்கில் தப்பி வந்துள்ளார். பர்லியார் சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் இவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர்.

இதில் சேலம் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தொடர்புடையதும், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தததைத் தொடர்ந்து அவரை சேலம் காவல் துறையிடம் உதகை வெலிங்டன் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.