டிரெண்டிங்

வேப்பமுத்து எடுக்கச் சென்ற மூதாட்டி.. சோலார் மின்வேலியில் சிக்கி பலி

kaleelrahman

அமராவதி அருகே சோலார் மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி வேப்பமுத்து எடுக்கச் சென்றபோது உயிரிழந்த பரிதாபம். தனியார் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்கு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி லட்சுமி (55) கூலி வேலை செய்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று வேப்பமுத்து எடுகக்கச் சென்றவர் இரவு ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.

இதனால் அச்சமடைந்த உறவினர்கள் மூதாட்டியை தேடிச்சென்றனர். அடுத்தநாள் காலையில் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதி தோட்டத்து சோலார் மின்வேலியில் சிக்கி சடலமாக கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


அதன் பின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கேரளாவை சேர்ந்த ஐபன் தாமஸ் என்பவர் 17ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தில் தனியார் தங்கும் விடுதி அமைத்திருந்தார். அதனை சுற்றியும் அனுமதியின்றி சோலார் மின்வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. எனவே உரிமையாளர் ஐபன் தாமஸ் மற்றும் மேலாளர் மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.