டிரெண்டிங்

தடுப்பணை குட்டையில் குளித்த பொறியியல் பட்டதாரி வாலிபர்... சடலமாக மீட்பு

தடுப்பணை குட்டையில் குளித்த பொறியியல் பட்டதாரி வாலிபர்... சடலமாக மீட்பு

kaleelrahman

கொல்லிமலை அடிவாரம் நாச்சியம்மன் குட்டை தடுப்பணையில் குளித்த பொறியியல் பட்டதாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வாழவந்தி கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் ஆச்சாவடி பகுதியில் நாச்சியம்மன் தடுப்பணைக்குட்டை அமைந்துள்ளது. விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இங்கு குளிப்பதற்காக வருகின்றனர்.

சேந்தமங்கலம் காந்திபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வேங்கையன் என்பவரின் மகன் மௌலிஸ். பொறியியல் பட்டதாரியான இவர், தனது நண்பர்களுடன் நாச்சியம்மன் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தடுப்பணையின் மேலே இருந்து தண்ணீரில் குதித்தவர் வெகுநேரமாகியும், தண்ணீரில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அருகில் குளித்தவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் நீருக்குள் மூழ்கி இருந்த மௌலிஸை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைபற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது போன்ற உயிரிழப்புகள் இப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் நாச்சியம்மன் தடுப்பணைக் குட்டையில் குளிப்பதற்கு தடை விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.