டிரெண்டிங்

விடுமுறை காலத்தில் மூலிகை தோட்டம் அமைத்து பராமரித்து வரும் அரசுப் பள்ளி மாணவர்கள்

விடுமுறை காலத்தில் மூலிகை தோட்டம் அமைத்து பராமரித்து வரும் அரசுப் பள்ளி மாணவர்கள்

kaleelrahman

தருமபுரி அருகே கொரோனா ஊரடங்கு காலங்களை பயன்படுத்தி பள்ளியில் தொன்மரபு மூலிகைகளை தோட்டம் அமைத்து, பராமரித்து வரும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள். 


தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பாலவாடி உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சங்கரின் வழிகாட்டுதல்படி, மாணவர்கள் பள்ளியில் பசுமை கடைகள் அமைத்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு பள்ளி வளாகம் முழுவதும் 700 நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவ மாணவிகள் வீட்டிலிருந்தபடியே படித்து வருகின்றனர். ஆனால் இப்பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் படிக்கும் நேரம் தவிர, மற்ற ஓய்வு நேரங்களில் மரங்களை பராமரித்து வருகின்றனர்.


அத்துடன் மூலிகைகள் அழிந்து வருவதை மீட்கும் வகையில் மருத்து மூலிகை தோட்டம் அமைக்கலாம் என மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.


இதனைத்தொடர்ந்து ஆசிரியர் உதவியுடன், பள்ளி வளாகத்தில் இடத்தை தேர்வு செய்து, தமிழர் தொன்மரபு மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளனர். அதில் சுக்கு, மிளகு, திப்பிளி, மஞ்சள், கீழாநெல்லி, சஞ்சீவி, கற்பூரவள்ளி, முடக்காத்தான் கீரை உள்ளிட்ட 100 வகையான மருத்துவ மூலிகை செடிகளை தொட்டிகட்டி நட்டு வளர்த்து வருகின்றன.


கொரோனா போன்ற பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், அழிந்து வரும் நமது இயற்கை மூலிகைகளை பாதுகாக்கவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் மூலிகை தோட்டம் அமைக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பொதுமுடக்கத்தால் விடுமுறை காலத்தில் மூலிகை தோட்டம் அமைத்து பராமரித்து வரும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.