டிரெண்டிங்

புதுக்கோட்டை: சிறப்பாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு அறிவிப்பு

kaleelrahman

புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக பணி செய்தால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா அறிவித்துள்ளார். 

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், புதுக்கோட்டை நகராட்சி சார்பில் 'தூய்மை இந்தியா இயக்கம் தூய்மையே சேவை' என்ற நோக்கில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பாராட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது. 

பின்னர் இவ்விழாவில் பேசிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா, "தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.அதே வேளையில் அவர்கள் பணிபுரியும்போது கவனமாகவும் பணிபுரிய வேண்டும். இனி வரக்கூடிய காலக்கட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்" என்று பேசினார். நகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பு தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.