டிரெண்டிங்

மதுரை: 2 கல்லூரி மாணவிகள் ஒரு சிறுமி உட்பட 4பேர் திடீரென மாயம்...கடத்தலா என விசாரணை

kaleelrahman

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் ஒரே நாளில் இரு கல்லூரி மாணவிகள் உட்பட 3 பெண்கள் ஒரு குழந்தை என அடுத்தடுத்து 4 பேர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சோழவந்தான் அருகே உள்ள எல்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி சோலை மலரையும் அவரது 10 வயது மகளையும் காணவில்லை என சோழவந்தான் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இந்த நிலையில் சிறிது நேரத்திலே கல்லூரிக்குச் சென்று வருவதாக கூறி விட்டுச் சென்ற கல்லூரி மாணவிகளான கமலேஸ்வரி, சத்யா என்ற இரு கல்லூரி மாணவிகளும் மாயமானது தெரியவந்தது. 

அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள், பெண் மற்றும் 10 வயது சிறுமியும் ஒரே நாளில் மாயமானதால் பெண்களை கடத்தும் கும்பல் சோழவந்தானில் ஊடுருவியிருக்கிறார்களா என பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சோழவந்தான் நகரப் பகுதிகள் உள்ள பேருந்து நிறுத்தம் வெறிச்சோடி காணப்பட்டது.

 தகவல் அறிந்து உஷாரான சோழவந்தான் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்வோரை தீவிர சோதனை செய்த பின்னரே வாகனங்களில் செல்ல அனுமதிக்கின்றனர். இச்சம்பவம் சோழவந்தான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.