டிரெண்டிங்

புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

Rasus

ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டி போட்ட ஒகி புயலுக்கு இதுவரை 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஒகி புயலால் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இதனிடையே, ஒகி புயல் பாதிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். இதில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஒகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஒகி புயலின் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட மூத்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.