குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இரானி, அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதையடுத்த அவர்கள் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலி என அறிவிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பாஜக சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஜகுல் தாகூரும் களமிறக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் சந்திரிகா சுதசமா மற்றும் குராவ் பாண்டியா வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜகுல் தாகூர் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்தப் புதிய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஜெய்சங்கர் பதவியேற்றார். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
1977ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான இவர் இந்தியா- அமெரிக்கா மற்றும் இந்தியா-சீனா உறுவுகளில் பெரும் பங்காற்றினார். அத்துடன் இந்தியா- அமெரிக்கா 2008 அணு ஆயுத ஓப்பந்தத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை செயலாளராக பணிப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.