டிரெண்டிங்

கடவுள் ஒழிப்பு மட்டும்தான் பெரியாரின் கொள்கையா..?: வளர்மதி பேச்சு

கடவுள் ஒழிப்பு மட்டும்தான் பெரியாரின் கொள்கையா..?: வளர்மதி பேச்சு

Rasus

கடவுள் ஒழிப்புக் கொள்கை மட்டும்தான் பெரியாரின் கொள்கையா..? பெண் உரிமை, பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கைதான் என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு இந்தாண்டிற்கான தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வளர்மதி இன்று பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய வளர்மதி, “ தினந்தோறும் கோயில் சென்று கொண்டிருக்கும் வளர்மதிக்கு பெரியார் விருதா..? என சமூக வலைத்தளங்களில் என்னை நோக்கி கேலி சித்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. யார் இதை வெளியிடுகிறார்கள்..? யார் என்னை கேலி செய்கிறார்கள்..? என்பது எனக்கு தெரியும். பெரியார் முன்னில்லையில் நடந்த கூட்டத்தில் 9 வயதுச் சிறுமியாக மேடை பேச்சை தொடங்கியவள் நான். பெரியார் முன்னிலையில் பேச்சை தொடங்கிய நான், இன்று அவர் பெயரால் வழங்கப்படும் விருதை பெற்றதை பெருமையாக கருதுகிறேன். கடவுள் ஒழிப்புக் கொள்கை மட்டும்தான் பெரியாரின் கொள்கையா..? பெண் உரிமை, பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கைதான். பெண் உரிமை கொள்கையை மையப்படுத்தியே ஒரு பெண்ணுக்கு பெரியார் விருதை முதலமைச்சர் கொடுத்துள்ளார்” என வளர்மதி பேசினார்.