மேகதாது அணைத் திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலின்றி கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக உமாபாரதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு புறம்பாக மேகதாதுவில் அணைகட்ட, தொழில்நுட்ப - பொருளாதார அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகா அணுகியிருப்பது துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் தமிழக அரசின் சம்மதமின்றி மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியிருப்பது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
ஆகவே, காவிரிப் பிரச்னை முடியும் வரை கர்நாடகாவின் எந்தத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மேகதாதுவில் அணை கட்ட எவ்வித ஒப்புதலும் வழங்க வேண்டாம் என்று வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளுக்கு அறிவுரைகள் வழங்குமாறும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதியை முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.