ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது அதிமுக. இச்சூழலில் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதையை காணலாம்.
1974-ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி ஒன்றியத்தில் உள்ள சிலுவம்பாளையம் கிளைக் கழகச் செயலாளர் பொறுப்புதான், எடப்பாடி பழனிசாமி வகித்த முதல் கட்சிப் பதவியாகும்.
அச்சமயத்தில் எடப்பாடி ஒன்றியம் முழுவதும் ஜெயலலிதா பெயரில் தனி கொடிக் கம்பங்கள் அமைத்து ‘அம்மா பேரவையை தொடங்கி அதிமுக தலைமையின் கவனம் ஈர்த்தார்.
இதையடுத்து 1989-ல் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று எடப்பாடி தொகுதியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 முதல் 1996 வரை எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார் பழனிசாமி. அதிலிருந்து பழனிசாமி பெயருக்கு முன்பு எடப்பாடி என்கிற ஊர் பெயரும் ஒட்டிக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவினரால் அழைக்கப்பட்டார்.
அதன்பிறகு சேலம் வடக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர், சேலம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்ற எடப்பாடி பழனிசாமி, 1998-ல் திருச்செங்கோடு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இதனைத் தொடர்ந்து, 2006-ல் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அதற்கடுத்த ஆண்டில் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் ஆனார்.
2003-இல் தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக எடப்பாடி பழனிசாமி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் வெற்றிபெற்று, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு நடந்த அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் 2017 பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் ஆனார்.
அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவிருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.