டிரெண்டிங்

“யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்” - விஜய்க்கு பதிலடி கொடுத்த முதல்வர்

webteam

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கவும் கருத்து கூறவும் உரிமை உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

அக்டோபர் 2ம் தேதி விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய விஜய்யிடம் ‘நீங்கள் முதலமைச்சராக ஆனால் என்ன செய்வீர்கள்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘முதலமைச்சரானால் நான் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்’ என்று கூறியிருந்தார். அந்தப் பதில் பரவலான விமர்சனத்தை கிளப்பியது. 

இந்நிலையில் மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் பேச்சு குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் அவர்களின் கருத்துக்களை சொல்லலாம். அதற்கான உரிமை இருக்கிறது. ஏனென்றால் இது மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஆகவே அந்தக் கருத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கலாம்” என்றார். அவரிடம் விஜய்க்கான வாய்ப்பு எப்படி இருக்கும் என்றும் கேட்டனர். அதற்கு அவர், “இன்னும் அவர் கட்சியே தொடங்கவில்லையே’ என்று பதிலளித்தார்.