தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது எனவும் இன்னும் பிரியவில்லை எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது தமிழக காங்கிரஸ் சார்பில் வெளியான அறிக்கை திமுக - காங்கிரஸ் கூட்டணி உறவில் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற சிஏஏ தொடர்பான ஆலோசனை கூட்டத்தை திமுக புறக்கணித்தது. பின்னர், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் பேட்டி மேலும் அதனை உறுதி செய்தது.
இந்த நிலையில்தான் தங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று காலை கூறியிருந்தார். அப்போது பேசிய அவர், “எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் அது வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டிஆர் பாலு கூறினார். நான் பதிலே சொல்லிவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. இன்னும் பிரியவில்லை. கூட்டணியில் யாருக்கும் திமுக பாரபட்சம் காட்டுவது இல்லை. கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். யாரையும் வெளியே போ என்று சொல்வதில்லை. அவர்களே போனாலும் கையை பிடித்து ஒப்பாரி வைப்பதும் இல்லை. கூட்டணி கட்சிகள் வேறு முடிவை எடுத்தால் அதற்கு திமுக பொறுப்பாகாது. எங்கள் கூட்டணியில் இருக்கும்வரை மரியாதையுடனே நடத்துகிறோம். அது இனியும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.