டிரெண்டிங்

மதுபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய காவலர் கைது

webteam

புதுக்கோட்டையில் உதவி ஆய்வாளரை மதுபோதையில் தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஜாகிர் உசேன் மனைவியை கட்டையால் தாக்கியதுடன், தடுக்க வந்த மாமனார் அப்பாஸையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார், காவலர் ஜாகீர் உசேனை தேடி வந்தனர். இதற்கிடையே சொந்த ஊரான முத்துபட்டினத்துக்கு சென்ற ஜாகிர் உசேன் மதுபோதையில் தாய் மற்றும் உறவினரோடு ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியே வந்த வல்லத்திரக்கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், ஜாகிரை தட்டி கேட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த ஜாகிர், பாலசுப்பிரமணியன் கன்னத்தில் அறைந்துள்ளார். அத்துடன் அவரது செல்போனையும் பறித்து சாலையில் வீசி உடைத்ததுடன், கடுமையாக தாக்கி உள்ளார். இதையடுத்து தப்பி ஓடிய ஜாகிரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.