டிரெண்டிங்

பேனர் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக வரவேற்பா?

rajakannan

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே மதிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். பேனர் கலாச்சாரத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் வி.பி.துரைசாமி கூறினார். மேலும், நீதிமன்ற தீர்ப்பை முதல்வர் மதிக்காமல் திருச்சியில் பெருமளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, அரசு சார்பில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எந்த ஒரு சட்டவிதி மீறலும் நடைபெறவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். உயிரோடு இருப்பவர்களுக்கு வைக்‌கப்பட்டுள்ள பேனர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தான் இருக்கும் இடத்தில் பேனர்கள் வைக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனிடையே, உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது இறுதித் தீர்ப்பல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.