பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி மற்றும் திமுகவின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் அனுமதி மறுத்ததையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்த கனிமொழி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்ததை அடுத்து கனிமொழி தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.
அதேபோல், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சியில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஸ்ரீப்ரியா, சிநேகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக, இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்தார்.