டிரெண்டிங்

சோபியா பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வதா? - ஸ்டாலின் கண்டனம்

rajakannan

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பார்த்து சோபியா என்ற பெண் , ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்டார். இதனையடுத்து, காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளிக்க, போலீசார் சோபியாவை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவி சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, ஜாமினில் மாணவி சோபியா வெளியே வந்துள்ளார். 

இதனிடையே, போலீசாரிடம் சோபியா தனது பழைய பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், புதிய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்ய வேண்டுமென மாணவி சோபியாவிடம் காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். 

மாணவி சோபியாவின் கைது நடவடிக்கைக்கை பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தொடக்கத்திலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சோபியா கைதை கண்டித்து கருத்து தெரிவித்தார். இந்நிலையில், மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டரில், “#பாசிசபாஜகஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி "சம்மன் அனுப்பி" மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது.

மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும். மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.