டிரெண்டிங்

இனி கட் அவுட்டுகளுக்கு "கெட் அவுட்" திமுக அதிரடி அறிவிப்பு

webteam

திராவிட முன்னேற்றக்கழகப் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும்  இடங்களிலோ, அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளிலோ பேனர்கள், கட்அவுட்கள், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்கள் வைக்க வேண்டாம் என்று திமுக அறிவித்துள்ளது.

இது குறித்து திமு தலைமைக்கழகம் இன்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது இதில் " பேனர்கள் கட்அவுட்டுகள் வைத்து பொதுமக்களுக்கும், வாகனஓட்டிகளுக்கும் இடையூறு செய்யக்கூடாது என்றும், எந்த வகையிலும் பொதுச் சொத்துகளுக்குச் சேதாரம் ஏற்படுத்தக் கூடாதென்றும் ,கழகச்செயல் தலைவர் அவர்கள் பொறுப்பேற்ற நேரத்திலேயே கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதைக் கழகத்தில் பல நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் முறையாகக்கடைப்பிடித்து வந்தாலும், ஒரு சிலநிர்வாகிகள் ஆர்வ வேகத்தின் காரணமாக அந்த அறிவுரையைக் கடைப் பிடிப்பதில்லை. உதாரணத்துக்கு அண்மையில் கழகச் செயல் தலைவர் பங்கேற்ற அண்ணாநகர் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளி வந்த செய்திகள் வாயிலாகத் தெரியவருகிறது.


 
 இந்த செய்திகளைப் படித்தவுடன் கழகச் செயல்தலைவர்,சம்பந்தப்பட்ட கழக நிர்வாகிகளை அழைத்து, பாதிக்கப்பட்ட நடைபாதைகளை உடனடியாகப் பழுதுபார்த்து முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவந்து சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அவர்களும்அப்பணிகளைச் செவ்வனே செய்துமுடித்து உள்ளனர்.
 ஆகவே கழகச் செயல்தலைவர் ஏற்கெனவே விரும்பிவெளிப்படுத்தியவாறு, கழக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்களை அளவின்றிச்செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கழக நிகழ்ச்சிகுறித்து முக்கியமான ஓரிரு இடங்களில் விளம்பரம் செய்தாலே போதுமானது. இந்த அறிவுரைகள் மீறப்படாமல் பின்பற்றப்படுவதை கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.