டிரெண்டிங்

சட்டமன்றத் தேர்தலில் ஏற்றம் கண்டு உள்ளாட்சித் தேர்தலில் கோட்டை விட்ட கட்சிகள்: விவரம் இதோ

Veeramani

நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்றிருந்த தேமுதிக, நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கட்சியாக உருவெடுத்தது தேமுதிக. ஆனால் அதற்கு பிறகு தேமுதிக இறங்கு முகத்தை சந்தித்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த இக்கட்சி உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி வெளியேறியது. அதன்பின்னர் அமமுக தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்தித்த தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்ற தேமுதிக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் தனியாக களம் கண்டது. இந்த தேர்தலிலும் அதன் வாக்கு சதவீகிதம் சரிவை கண்டுள்ளது. மாநகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர் இடமும் கூட கிடைக்காத நிலையில், நகராட்சிகளில் 12 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 23 வார்டுகளிலும் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது.

இதே போன்று, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்கு சதவீகிதம் உயர்ந்தது. ஆனால், தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பேரூராட்சிகளில் மட்டும் 6 இடங்களில் நாம் தமிழர் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்திய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி , நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.