சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டை சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் மறுத்துள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். பின்னர் அவர் சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் கூறினார். இதை டிஜிபி சத்திய நாராயணராவ் மறுத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த், டிஐஜி ரூபா இரண்டு முறை டிஜிபியிடம் இருந்து மெமோ வாங்கியிருப்பதாகவும் எனவே தற்போது சசிகலாவை அவர் பகடைக்காயாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், சசிகலாவிற்கு தண்ணீர், உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்தான் கொடுக்கப்படுகிறது எனக் கூறிய அவர், இதனை சிறப்பு வசதிகள் என சொன்னால் அதனை எப்படி ஏற்பது? என கேள்வி எழுப்பினார்.