டிரெண்டிங்

முதல்வர் பழனிசாமியை எதிர்க்க முடியாது - திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் கருத்து

rajakannan

அதிமுக ஆட்சியில் சில குறைபாடுகள் இருந்தாலும் சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பழனிசாமியை எதிர்க்க முடியாது என திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறியுள்ளார்.

தினகரன் அணியுடன் நீண்ட காலமாக இருந்து வந்தவர் சசிகலாவின் சகோதரர் திவாகரன். இவர் சமீபத்தில் தினகரன் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். தினகரனை விமர்சித்த அதேவேளையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்தார். புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் பேசிய போது, அம்மா அணி என்ற பெயரில் இயங்க உள்ளதாக  அறிவித்தார். அதன்படி அம்மா அணிக்காக மன்னார்குடியில் அலுவலகம் ஒன்றை அவர் திறந்துள்ளார். அம்மா அணியின் ஒருங்கிணைப்பாளராக திவாகரன் உள்ளார்.

இந்நிலையில், திவாகரனை தொடர்ந்து அவரது மகன் ஜெய் ஆனந்தும் தினகரன் மீது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் சிலர் திவாகரனின் அம்மா அணியில் இணைந்துள்ளனர். கட்சியில் மூத்த நிர்வாகிகளை டிடிவி தினகரன் மதிக்கவில்லை. தினகரன் செய்த பிரச்னையால் தான் தனி அணியாக திவாகரன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சசிகலா விட்டுச் சென்ற அதிமுகவை டிடிவி தினகரனால் காப்பாற்றத் தெரியவில்லை” என்றும் விமர்சித்தார்.