மதுரை அலங்காநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறிக்க முயன்று வசமாக மாட்டிகொண்ட நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் தனியாக சாலையில் நடந்து சென்றதை நோட்டமிட்டு இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இளைஞர் விஜயா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது விஜயா, இது கவரிங் செயின் விட்டு விடுங்கள் என்று கெஞ்சியவாறு கத்தியுள்ளார். ஆனால் அதனை நம்பாத அந்த நபர் வலுக்கட்டாயமாக செயினை பறித்துள்ளார். இதனை பார்த்த கிராம மக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்,
பின்னர் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர. காவல்துறையினரின் விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் மதுரை முல்லைநகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.