பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே காப்பாற்றப்பட வேண்டும். 4ஜி அலைக்கற்றை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சேவை விரிவாக்கத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதை கைவிட்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்றுபட்டு பிப்ரவரி 18 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
மோடி அரசாங்கம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஃவோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்துவிட்டது. ஆனால் தனது சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது தனியார் கார்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கு வழி வகுப்பதாகும்.
தனியார் நிறுவனங்களுக்கு இந்திய நாட்டு வங்கிகளிடமிருந்து ரூ. 8 லட்சம் கோடி அளவிற்கு கடன் கொடுத்துள்ள மோடி அரசு, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கடன் வழங்க மறுப்பது, கார்பரேட் நிறுவனங்களை வளர்க்கும் நோக்கமே தவிர வேறில்லை.
மேலும் பி.என்.எஸ்.எல். ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த பின்பும் தீர்வு காண மத்திய அரசு மறுத்து வருகிறது.
நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை எஸ்மா சட்டம் கொண்டு ஒடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
எனவே, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகளை முறையாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூகத் தீர்வு காண வேண்டும். ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.