நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் மாணவர்களை அரசு அடக்குவது தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை என்றால், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறினார். நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், எதிர்கால மாணவர்களின் நலனை காக்கும் உரிமை தற்போதுள்ள மாணவர்களுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்றும், மத்திய அரசு தனது நிலையை மாற்றும் வரை மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.