காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததற்காக கருணாஸ் எம்.எல்.ஏ மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், “காவல்துறையினர் யார் மீது வேண்டுமானாலும் குண்டாஸ் போடுகிறார்கள். கை, காலை உடையுங்கள் என்று சொல்கிறார்கள். ஒருவரை அடித்து மிரட்டி கை, காலை உடைக்கச் சொல்வது என்ன நியாயம்?. முக்குலத்தோர் சமுதாயத்தினரின் கை, கால்களை உடைப்பவர்களின் கை, கால்களை உடையுங்கள்; பாத்துக்கலாம். அதிகார திமிர் தானே உங்களை இவ்வாறு செய்ய வைக்கிறது?.
நீ கொலை கூட பண்ணு, என்னிடம் சொல்லிவிட்டு பண்ணு(தொண்டர்களிடம்). கொலை செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். உன்னை வாழ விடவில்லை என்றால் கோபம் வரத்தான் செய்யும். தூங்கி எழுந்து பல்துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம். ஃபிலிம் காட்டவில்லை, வழக்கு, ஜெயில், பெயில் எல்லாம் வரும், பார்த்துக்கலாம்.
சில போலீஸ் அதிகாரிகள் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ரவுடிகளை போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுரை கூற வேண்டும்” என்று பேசி இருந்தார் கருணாஸ். முதலமைச்சர் பழனிசாமி குறித்தும் சில கருத்துக்களை பேசினார் கருணாஸ்.
காவல்துறையினரை மிரட்டும் வகையில் நடிகர் கருணாஸ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர், காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது 6 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, கருணாஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, எம்எல்ஏ கருணாசின் பேச்சு, முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சட்டத்தை மீறி யார் பேசினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். கருணாஸின் பேச்சுக்கு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.