டிரெண்டிங்

”முறைகேட்டை தட்டிக் கேட்டதால் சாதிப்பிரச்சனையை தூண்டுகிறார்” ஊராட்சி தலைவி மீது புகார்

kaleelrahman

மன்னம்பந்தல் ஊராட்சியில் நடந்த முறைகேட்டை கேட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சாதிப்பிரசச்னையை தூண்டுவதாக ஊராட்சி மன்ற தலைவி மீது உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் இளம் பட்டதாரி பிரியா பெரியசாமி. இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி நிதியில் வாங்கிய சுழல் நாற்காலியில் அமரக்கூடாது என்று மாற்று சமூகத்தை சேர்ந்த துணைத்தலைவர் அமலாவும் அவரது கணவர் ராஜகோபாலும் சாதிப்பெயரைச் சொல்லி திட்டியுள்ளதாகக் கூறி நேற்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினார். 

தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் துணைத்தலைவர் மற்றும் அவரது கணவர் மீது பிரியா பெரியசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 இந்நிலையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 2 ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 உறுப்பினர்கள், தங்களது ஊராட்சியில் சாதிப்பிரச்னை இதுவரை எழவில்லை என்று கூறியுள்ளனர். அத்துடன், துணைத்தலைவரின் அனுமதியில்லாமல் டிவைசை பயன்படுத்தி ரூ.9 லட்சத்திற்கான நிதியை பெற்றுள்ளது குறித்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்ததால் ஊழலை மறைப்பதற்கு தலைவர் குடும்பத்தினர் சாதிப்பிரச்னையை தூண்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர். 

 அதேபோல, “ஊராட்சிமன்ற தலைவர் பிரியா அலுவலகத்திற்கே வருவதில்லை. அவருக்கு பதிலாக தலைவரின் தந்தை பெரியசாமி, தாய் மற்றும் சகோதரர்தான் ஆட்சி செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சுழல் நாற்காலி பிரச்னை நடக்கும்போது ஊராட்சிமன்ற தலைவியே  அலுவலகத்தில் இல்லை. சாலையில் விளக்குகள் எரியாமல் இருக்கும் இந்த நேரத்தில் நாற்காலிக்கு இவ்வளவு செலவு தேவையா என்றுதான் கேட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்யாமலேயே தங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். 

மன்னம்பந்தல் ஊராட்சியில் முறையாக விசாரணை செய்து ஊராட்சிதுறை மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.