டிரெண்டிங்

விஜயை எம்ஜிஆராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு

webteam

நடிகர் விஜயை எம்ஜிஆரின் மறு உருவமாக சித்தரித்து, 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு முதல்வராக வேண்டும் என குறிப்பிட்டு தேனி பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய விவகாரத்தில், ஒருவர் மீது தேனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த சில மாதங்களாக தேனி பகுதியில் நடிகர் விஜயின் ரசிகர்கள், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோணத்தில் பல்வேறு வகையான சுவரொட்டிகளை ஒட்டியதாகச் சொல்லப்படுகிறது.  அந்தவகையில் தேனியில் இன்றும் நகரின் பல்வேறு இடங்களில், நடிகர் விஜயின் உருவப்படத்தை எம்.ஜி.ஆரின் மறு உருவமாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் விஜய் தமிழகத்திற்கு தலைமை ஏற்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்தப் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் போஸ்டர்கள் தற்போது முழுவதுமாக கிழிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி சுவரொட்டி ஒட்டிய விஜய் ரசிகர்ஒருவர் மீதும், அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.