டிரெண்டிங்

கறந்த பாலை வாங்க மறுத்த கூட்டுறவு சங்கம்: கிணற்றில் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

kaleelrahman

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கறந்த பாலை கூட்டுறவு சங்கத்தினர் வாங்க மறுத்ததால் கிணற்றில் ஊற்றி கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமள் தேவன்பட்டி கிராம மக்களின் பிரதான தொழில் பால் உற்பத்தியாகும். இங்கு உற்பத்தியாகும் பால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முழுவதும் வினியோகிக்கப்படும் பாலின் அளவிற்கு சமமானதாக இருக்கும்.


இந்நிலையில் கறக்கப்பட்ட பாலை கூட்டுறவு சங்கத்தினர் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தினந்தோறும் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கிவந்த பால் உற்பத்தியாளர்கள் இன்று கூட்டுறவு சங்கத்தின் முடிவை கடுமையாக எதிர்த்தனர்.


குறிப்பாக பால்வளத்துறை அமைச்சரின் தொகுதியான சிவகாசி தொகுதியும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியும் விருதுநகர் மாவட்டத்தில் தான் உள்ளது. மாநில பால்வளத்துறை அமைச்சர் உள்ள இந்த மாவட்டத்திலேயே நிலைமை இப்படி என்றால் மற்ற மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் நிலைமை கவலைக்குரியது என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உடனடியாக பால்வளத்துறை அமைச்சர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்களது நிலைமை மாறும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.