டிரெண்டிங்

மழை நிவாரணத்திற்கு ரூ.1,500 கோடி தேவை: பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

Rasus

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய பிரதமர் நரேந்திரே மோடியிடம் 1,500 கோடி ரூபாய் நிதி உதவி கோரியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி தினந்தந்தி பவளவிழாவில் பங்கேற்றார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் டெல்லி கிளம்பிய அவரை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கனமழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறியபோது பிரத‌மர் கவனமுடன் கேட்டதாகவும், தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்ததாகவும் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனை வெளியேற்ற வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டியுள்ளது. எனவே பிரதமர் மோடியிடம் தற்போது 1,500 கோடி ரூபாய் நிதியை கோரியுள்ளோம். மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் ஒருகாலத்தில் கிராமமாக இருந்தது. கிராமமாக இருந்தபோதே எந்தவித அனுமதியும் இல்லாமல் வீடுகளை கட்டிவிட்டனர். உதாரணத்திற்கு நாராயணபுரம் ஏரிக்கு கீழேயே வீடு கட்டி உள்ளனர். அதெல்லாம் பாசன பகுதியாகத்தான் இருந்தது. தாழ்வான பகுதிகளில் வீடு கட்டியதால்தான் தண்ணீர் தேங்குகிறது. இருந்தாலும் அரசு அதற்கு தேவையான திட்டங்களை தயாரித்து தேங்கிய நீரை வெளியற்ற நடவடிக்கை எடுக்கும்" என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.