டிரெண்டிங்

மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

Rasus

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவிலலை. மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில்  போராட்டமும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை தேடும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருதாக குறிப்பிட்ட அவர், காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி இறுதி வரை தொடரும் எனவும் தெரிவித்தார். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். காணாமல்போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.