டிரெண்டிங்

ஸ்ரீபெரும்புதூரில் வானூர்தி தொழில்நுட்பப் பூங்கா: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

ஸ்ரீபெரும்புதூரில் வானூர்தி தொழில்நுட்பப் பூங்கா: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

rajakannan

ஸ்ரீபெரும்புதூரில் வானூர்தி தொழில்நுட்பப் பூங்கா அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் வல்லம் - வடகால் சிப்காட் வளாகத்தில் 245 ஏக்கர் பரப்பளவில் 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 

இது தமிழக அரசின் கீழ் இயங்கும் சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்களால் செயல்படுத்தப்படவிருக்கிறது. தமிழகத்தில் தொழில்‌ வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாகவும், ‌வானூர்தி சார்ந்த படிப்புகளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கவும் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சம்பத், பெஞ்சமின், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் ‌கலந்து கொண்டனர்.

வானூர்தி தொழில் பூங்கா மூலம் ஓராண்டிற்குள் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். மேலும், 14 நிறுவனங்கள் இந்தப் பூங்காவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், முதற்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.