சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இதனைக் கூறினார். கூட்டத்தில் பேசிய மோடி, “தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் இருக்கிறோம். செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி, தமிழ் மொழி மிக அழகானது. தமிழகத்தில் விசைத்தறிகள் மேம்படுத்த மத்திய அரசு உதவி வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தறிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
திரையுலகில் மட்டுமல்ல மக்களின் இதயங்களையும் வென்றவர் எம்.ஜி.ஆர். இலங்கை சென்றிருந்த போது எம்.ஜி.ஆர் பிறந்த இடத்தை பார்வையிட்டேன். இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு சார்பில் 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளேன். 1900 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். தமிழர்கள் எங்கிருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான். ஆப்கானிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டு வந்தது. சவுதி இளவரசரிடம் பேசி அங்குள்ள தமிழர்களை விடுவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.