டிரெண்டிங்

பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் : சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததால் பரபரப்பு!

webteam

முழு பொது முடக்க காலத்தில் கறி மற்றும் மது விருந்து வைத்து பிறந்த நாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக துணை சேர்மன் உள்ளிட்ட 50 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராக இருப்பவர் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன். திமுகவில் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார். கொரோனாவால் கடந்த 19-ஆம் தேதி முதல், முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், 19-ஆம் தேதி தமது 50-வது பிறந்த நாளை மாந்தோப்பு ஒன்றில் 100-க்கும் மேற்பட்டவர்களுடன் குணசேகரன் கொண்டாடியதாக தெரிகிறது.

இதில் திமுக பிரமுகர்கள் அதிகளவில் கலந்து கொண்டதாகவும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 5 அரசு அலுவலர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் பிறந்த நாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  குணசேகரன், 6 வருடங்களுக்கு முன்பு செம்மரக்கடத்தல் வழக்கில் சிறைக்குச் சென்றவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்