டிரெண்டிங்

“நான் வெற்றி பெறுவது உறுதி” - பாஜக வேட்பாளர் ஹேமமாலினி

webteam

நாடாளுமன்றத்தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி என மதுரா தொகுதி பாஜக வேட்பாளர் ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நாடாளுமன்றத் தொகுதியில் நடிகை ஹேமா மாலினி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார்.

சில நாட்களுக்கு முன்பு மதுராவில் விவசாய பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் ஹேமா மாலினி வாக்குச் சேகரித்தார். அப்போது தங்க நிறப் புடவை அணிந்து கொண்டு வயலில் இறங்கி அறுவடை செய்தார். இந்தக் காட்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவரது ட்விட்டர் கணக்கு பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உத்வேகத்துடன் பணிகளை தொடங்கியுள்ளதாக பதிவிட்டார்.

இதே போல் ஹெலிகாப்டரில் பறந்து வந்தும், பென்ஸ் காரில் குடை பிடித்தபடி வந்தும், கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு வந்தும் விவசாயிகளுக்கு உதவதுபோல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் ஹேமா மாலினி. இதனால் சமூகவலைதள வாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளார். 

இந்நிலையில் செய்தியாளருக்கு பேட்டியளித்த ஹேமாமாலினி, “நான் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. ஏனென்றால் நான் என் பணிகளை சரிவர செய்து முடித்திருக்கிறேன். என்னுடைய அரசும் பணிகளை சரிவர செய்து முடித்திருக்கிறது. அதனால் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பது உறுதி. மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். சாதிய அரசியல் தற்போது வேலை செய்யாது” எனத் தெரிவித்தார்.