டிரெண்டிங்

எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டே எம்.பி. தேர்தலில் போட்டியிடலாமா?

எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டே எம்.பி. தேர்தலில் போட்டியிடலாமா?

webteam

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டன. 

இந்நிலையில் திமுக தலைமையில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நள்ளிரவில் அறிவித்தது. அதன்படி தனி தொகுதியான திருவள்ளூரில் கே.ஜெயக்குமார், கிருஷ்ணகிரியில் ஏ.செல்லகுமார், ஆரணியில் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோர் போட்டியிட உள்ளனர். கரூர் மக்களவை தொகுதியில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விருதுநகரில் மாணிக் தாகூர் ஆகியோர் களம் காண்கின்றனர். கன்னியாகுமரி தொகுதியில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட உள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹெச்.வசந்தகுமார், தற்போது நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வசந்தகுமாரின் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவர் தற்போதைய எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட முடியும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.

எம்.எல்.ஏ.பதவியில் இருப்பவர்கள் எம்.பி. தேர்தலில் போட்டியிடலாம். மக்களவைத் தேர்தலில் வென்றால் மட்டுமே எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆதாயம் தரும் இரு பதவிகளை ஒருவர் வகிக்க முடியாது என்பதால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் எம்.பி. தேர்தலில் போட்டிடுவதற்கே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பரவும் செய்தி தவறானது.