டிரெண்டிங்

பல்லாவரம் மநீம வேட்பாளர் கார் மீது பஸ் மோதிய விபத்து: உரிய விசாரணை நடத்த கோரிக்கை

kaleelrahman

பல்லாவரம் மநீம வேட்பாளரின் கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யக்கோரி காவல்நிலையம் முன்பு கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி மநீம வேட்பாளர் செந்தில் ஆறுமுகத்தின் கார் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை, ராதா பெட்ரோல் பங்க் சிக்னலில் நின்று கொண்டிருந்தது. அப்போது தனியார் பேருந்து ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் கார் விபத்துக்குள்ளானபோது வேட்பாளர் காரில் இல்லை. காரின் ஓட்டுநர் கலைவாணன் (37) என்பவர் மட்டும் இருந்துள்ளார். இந்த விபத்தில் காரின் பின்பக்கம் மட்டும் சேதமடைந்தது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்ததன் புகாரின் பேரில் சி.எஸ்.ஆர்.பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் காவல்நிலையம் முன்பு குவிந்து வழக்குப்பதிவு செய்யக்கோரி வலியுறுத்தினர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநரான  மாங்காட்டை சேர்ந்த முகமது மொய்தீன் (39) என்பவரை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். மநீம வேட்பாளர் செந்தில் ஆறுமுகம், விபத்து குறித்து உரிய விசாரணையும், உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.