அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என அதன் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் மூவரும் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் தினகரன் தரப்பை அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் எனவும் அவர்கள் மூவரும் வலியுறுத்தியுள்ளனர்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த, தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பேசியபோது, "பாஜகவின் சூழ்ச்சியை ஒன்றுபட்டு எதிர்த்து நிற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதிமுக-வை பிளவுடுத்தி அழிக்க கூடிய வேலைகளை பாஜகதான் செய்கிறது என தமிழகத்தின் சாமானிய குடிமகன் கூட கருதுகிறான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் பெரிதும் உதவியிருக்கின்றன. அந்த வகையில், திராவிட கட்சிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். முதலில் அதிமுக-வை அடிப்பார்கள். அதன்பின் திமுக-வை அடிப்பார்கள். இதுதான் பாஜக-வின் நீண்ட கால திட்டமாக உள்ளது" என்றார்.
முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த கருணாஸ் எம்எல்ஏ பேசும்போது, "ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வந்த இரண்டு முதலமைச்சர்களும் சசிகலாவால்தான் அடையாளம் காட்டப்பட்டவர்கள். சசிகலா சொன்னதின் பேரில் தான் நாங்கள், இருவருக்கும் ஒத்துழைப்பு வழங்கினோம். அந்த வகையில் சசிகலா, தினகரனை நீக்கி அதிமுக செயல்படுவது என்பது ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்திற்கு எதிரானது. பாஜக-வின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகி விடக் கூடாது" என்றார்.
கொங்கு இளைஞர் பேரவையை சேர்நத் தனியரசு எம்எல்ஏ பேசும்போது, "20-க்கு மேற்பட்ட எம்எல்ஏ-க்களின் ஆதரவை பெற்றுள்ள டிடிவி தினகரனை ஒதுக்கிவைத்து, நிலையான ஆட்சி தர முடியும் என்கிற வலிமை நமக்கு இல்லை. இதுதான் யதார்த்த உண்மை" என்றார்.