டிரெண்டிங்

அதிமுகவுடன் இழுபறி: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறதா பாஜக?

Veeramani

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக - பாரதிய ஜனதா இடையே தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனிடையே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் பாரதிய கட்சிகளின் நிர்வாகிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். 4 மணி நேரம் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடரும் எனக் கூறிய நிலையில், இரு கட்சிகளும் நிர்வாகிகளுடன் ஞாயிறன்று தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியினர் 20 சதவிகித இடங்களை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் 5 சதவிகித இடங்களை மட்டுமே வழங்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரு கட்சிகள் இடையே , இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் கூட்டணி தொடருமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக அறிவித்துவிட்டு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று பாஜக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.