டிரெண்டிங்

கோவா முதல்வர் ஆகிறார் பிரமோத் சாவந்த்? - இரவு 11 மணிக்கு பதவியேற்பு

webteam

கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பிரமோத் சாவந்தை பாஜக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓராண்டுக்கு மேலாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், நேற்றிரவு காலமானார். பாரிக்கரின் குடும்பத்தினரை சந்தித்த மோடி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் மறைந்த முதல்வரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மாலை 5 மணியளவில் பாரிக்கர் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

மனோகர் பாரிக்கர் மறைவை அடுத்து, கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற போட்டி நிலவிவந்தது. இந்நிலையில், கோவா மாநிலத்தின் புதிய முதல்வர் இன்று இரவு 11 மணிக்கு பதவியேற்க உள்ளதாக கோவா அரசு அறிவித்துள்ளது. 

கோவா சட்டப் பேரவையின் சபாநாயகர் பிரமோத் சாவந்த் கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அமித் ஷா, நிதின் கட்கரி மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் அடங்கிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் விஜய் சர்தேசாய், சுதின் தவ்லிகர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதுஒருபுறம் இருக்க கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த உடனே, ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஏற்கனவே கோவா துணை சபாநாயகராக இருந்த பிரான்சிஸ் சவுஸா உயிரிழந்ததை அடுத்து நேற்று முன் தினம் ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும், ஒரு முதல்வர் உடல்நலக் குறைவால் மறைந்திருக்கிறார் என்பதையும் பாராமல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை பலரும் ட்விட்டரில் விமர்சித்து இருந்தனர்.