டிரெண்டிங்

"நான் உண்மை பேசும் வேட்பாளர்!" - அரவக்குறிச்சியில் அண்ணாமலை பிரசாரம்

webteam

"அரவக்குறிச்சி தொகுதி மக்கள் பொய் பேசும் வேட்பாளரை பார்த்துவிட்டார்கள், நான் உண்மை பேசும் வேட்பாளர்" என்றார் பாஜகவின் அண்ணாமலை.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் க.பரமத்தி பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, "அரவக்குறிச்சி தொகுதி மக்கள் பொய் பேசும் வேட்பாளரையும் பார்த்துவிட்டார்கள், உண்மை பேசும் வேட்பாளரையும் பார்த்துவிட்டார்கள். 3 சென்ட் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற வேட்பாளரையும் பார்த்தீர்கள்.

அரவக்குறிச்சி தொகுதி மக்களின் வாழ்க்கை எத்தனை ஆண்டு்காலம் இப்படியே இருப்பதற்கு அனுமதிப்பீர்கள். அரவக்குறிச்சியில் தொழிற்சாலை எதுவுமில்லை; படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். மத்திய பாஜக ஆட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் உள்ளது.

10 வருடங்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மூன்று மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். அந்த வேலையை விட்டுவிட்டு அடித்தட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த முறை பொய் பேசிய நபருக்கு வாக்களித்தீர்கள். இந்த முறை உண்மை பேசும் எனக்கு வாக்களியுங்கள்" என்றார் அண்ணாமலை.