பிஜு ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்து சம அளாவில் விலகி இருக்கும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியை காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் மேற்கொண்டுள்ளன. சந்திரபாபு நாயுடு இதற்காக மிகப்பெரிய முயற்சிகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தினார். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த மெகா கூட்டத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் கையிலெடுத்தார். நவீன் பட்நாயக் மற்றும் மம்தா பானர்ஜியை உள்ளிட்டோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும் என்று எதிர்ப்பட்ட நிலையில், மூன்றாவது அணி குறித்த பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் மெகா கூட்டணியில் சேருவது குறித்து செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு யோசித்து முடிவு எடுப்பதற்கு நேரம் தேவை என்று கூறியிருந்தார். ஆனால், “மெகா கூட்டணி என்பது மிகவும் சிரமமானது, பிஜு ஜனதாதளம் அந்தக் கூட்டணியில் இடம்பெறாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்து சம அளவில் விலகி இருக்க வேண்டும் என்பதே பிஜு ஜனதாதளத்தின் கொள்கை” என்று நவீன் பட்நாயக் இன்று தெளிவாக கூறிவிட்டார்.
விவசாய பொருட்களின் அடக்கவிலையை உயர்த்த வலியுறுத்தி, டெல்லியில் ஒடிசாவைச் சேர்ந்த விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு பேசியபோது இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “தேர்தல் நேரங்களில் கொடுக்கும் வாக்குறுதிகளை நாங்கள் மறந்துவிட வேண்டுமா?. ஒருபோதும் மறக்கமாட்டோம். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக மறந்துவிட்டது. முறையான அடக்கவிலையை நிர்ணயிப்பது அரசின் கடமை. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்துவது அதன் பொறுப்பு” என்றுபேசினார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நவீன் பட்நாயக் ஆதரவு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.